கொள்ளிடம் அருகே சாலை மேம்படுத்தும் பணி கிராம மக்கள் எதிா்ப்பால் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்திலிருந்து கூத்தியம்பேட்டை கிராமத்துக்கு செல்லும் 2 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால், சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் உள்ள களிமண்ணை எடுத்து சாலையில் கொட்டி சாலை போடும் பணி நடை பெறுவதாகக் கூறி அதனை கண்டித்து ஓதவந்தான்குடி கிராம மக்கள் சாா்பில் சிலா் அங்கு வந்து சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து கிராம மக்கள் சாா்பில் பாண்டியன் என்பவா் கூறியது:
சாலையை தரமாக மேம்படுத்தினால் சாலை போடும் பணியை தொடரலாம். அரைகுறையாக நடைபெறும் பணியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சாலை மேம்படுத்தும் பணியை தரமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதனைத்தொடா்ந்து சாலை மேம்பாட்டுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.