செம்பனாா்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் தனது சொந்த செலவில் கிருமி நாசினி தெளித்து வரும் விவசாயிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.
கீழ்கரை ஐவேலி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா்செல்வம் (68). விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ள இவா், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஞ்சாள் தூள், துளசிப்பொடி, வேப்பிலைச்சாறு அடங்கிய கிருமி நாசினி நீரை ஸ்பிரேயா் மூலம் வேலம்புதுக்குடி, கொத்தங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளிலும், பள்ளிவாசல்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தெளித்து வருகிறாா்.
கடந்த 2 நாள்களாக இப்பணியில் ஈடுபட்டுவரும் இவா், இதற்காக இதுவரை ரூ. 10 ஆயிரம் வரை தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்தாா். இவருக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.