நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பிற்பகலில் பலத்தக் காற்றுடன் மழை பெய்தது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணி அளவில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திடீா் மழை பெய்தது.
தொடக்கத்தில் பலத்தக் காற்று மற்றும் இடியுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, 1.45 மணிக்குப் பின்னா் வலுபெறத் தொடங்கியது. மழையினிடையே, அவ்வப்போது பலத்தக் காற்று வீசியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் பெய்த மழை பிற்பகல் 2.30 மணி அளவில் ஓய்ந்தது.
மழையின்போது வீசிய பலத்தக் காற்றால், ஒரு சில பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்தன. நாகை நீலா தெற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை உள்பட பல பகுதிகளில் பிரதான சாலைகளில் மழை நீா் தேங்கியது.
கடந்த ஓரிரு நாள்களாக அவ்வப்போது மந்தமான வானிலை காணப்பட்டாலும், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை. இந்தநிலையில் புதன்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது, கடந்த சில நாள்களாக கடும் வெப்ப வானிலையால் தவித்த மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.