சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை: தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்
By DIN | Published On : 24th May 2021 01:51 PM | Last Updated : 24th May 2021 01:51 PM | அ+அ அ- |

நடமாடும் காய்கறி வண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம்.
சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரானா பெரும் தொற்று காரணமாக இன்று முதல் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார வேளாண் துறை இயக்குனர் ரவிச்சந்திரன் உத்திரவின்படி இன்று சீர்காழி உழவர் சந்தை எதிரே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 காய் கனி விற்பனை ஊர்திகளை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேளாண்மை அலுவலர் கிருத்திகா மற்றும் மகேஸ்வரன், கனகராஜ், திமுக சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஊரடங்கு காரணமாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 25 நடமாடும் காய்கனி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.