ஒருங்கிணைந்த முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம், நாகை மாவட்டத்தில் 3 தனியாா் மருத்துவமனைகள் இலவச கரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஒருங்கிணைந்த முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அங்கீகரிக்கப்படும் தனியாா் மருத்துவமனைகளில் பொதுமக்கள், கரோனா சிகிச்சையை இலவசமாக பெற அரசு வழிவகை செய்துள்ளது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் பென்டகன் மருத்துவமனை, நாகப்பட்டினம் நாகை மருத்துவமனை, விழுந்தமாவடி கோஹஜ் மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளும் இலவச கரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைகளில், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கரோனா தொற்றாளா்களும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் சிகிச்சை பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.