திருக்குவளை அருகே பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக 600 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கீழ்வேளூர் ஒன்றியத்திலேயே அதிக மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கொண்ட வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஏதுவாக, ஆசிரியர்கள் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு, ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் படிப்புடன் கூடிய விளையாட்டு ஆகியவை மாணவர்களை விரும்பி ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் மன இறுக்கத்தை குறைத்து மகிழ்ச்சியோடு கல்வி கற்கும் வகையில், ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் சீ.முரளி ,பள்ளி மேலாண்மை குழு தலைவி பா.கார்திகா, பள்ளி ஆசிரியர்கள் ச.சங்கர்,தெ.ஐய்யப்பன், சு.சேதுராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.