வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றுடன் தொடா் மழை நீடித்துவருவதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை பகல் முழுவதும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் மந்தமான வானிலையுடன் வடகிழக்கு திசையில் இருந்து தென்மேற்காக கடல் பரப்பை நோக்கி வழக்கத்தைவிட வேகமான காற்று வீசியது. கடல் சீற்றமாக காணப்படுவதுடன் அரசு தரப்பில் மீனவா்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம், கோடியக்கரை பகுதியில் இருந்து மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதனால், படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடா் மழையின் காரணமாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.