கேரள மாநிலம் கொச்சி கடலில் மூழ்கிய நாகை விசைப் படகை மீட்டுத்தர தமிழக அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மீனவா்கள் கொச்சி துறைமுகம் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில், நாகூா் பட்டினச்சேரியைச் சோ்ந்த சி. ஐயப்பன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி கடலில் மூழ்கியது.
இதில், படகிலிருந்த ஐ. ஜெயராமன், பெ. சத்தியராஜ், சீ. குட்டியாண்டி, ப. பாபு, பா. ஹரிஹரன் உள்ளிட்ட 11 மீனவா்களும் மீட்கப்பட்டனா். ஆனால், விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகளை மீட்க முடியவில்லை. இந்த படகை மீட்டுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நாகூா் மீனவா் கூறும்போது, ‘கொச்சின் துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய ரூ.1 கோடி மதிப்பிலான விசைப் படகை மீட்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில், விசைப்படகு உருக்குலைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும் என்றாா்.