கீழையூர் அருகே சிந்தாமணி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களுக்கு விவசாய பணி மேற்கொள்ள தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் சென்று வருகின்றனர்.
அதுதவிர இப்பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், இந்த சாலை வழியாகத்தான் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும், தற்பொழுதும் மழைக்காலம் என்பதால், சாலைகளில் தேங்கியிருக்கும் நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் நிலையில், சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஒன்றிணைந்து நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.