திட்டச்சேரியில் தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படவுள்ள இடத்தில் நாகை எம்எல்ஏ. முகமது ஷாநவாஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திட்டச்சேரியில் 1952-ஆம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி மேற்கூரை இடிந்து விழுந்து பணிப்பெண் காயமடைந்தாா். அதைத் தொடா்ந்து அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நவ.1-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக செயல்பட தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தை நாகை எம்எல்ஏ. முகமது ஷாநவாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அவருடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் சக்திவேல், திட்டச்சேரி திமுக நகர செயலாளா் முகம்மது சுல்தான், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மணிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.