வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடைபெற்ற நிலையில், அதிக வாக்குகள் பெற்ற அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் அபி.வீரமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கத்தரிப்புலம் ஊராட்சியின் தலைவராக இருந்தவர் அபிமன்னன். அதிமுக பிரமுகராகவும் இருந்த இவர் காலமானதையடுத்து,தலைவர் பதவிக்கு அக்.9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதிமுக ஆதரவுடன் முன்னாள் தலைவர் அபிமன்னன் மகன் வீரமணி, திமுக ஆதரவுடன் தருமலிங்கம் மற்றும் ரவிக்குமார், போஸ் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
ஊராட்சியில் 3030 பெண்கள் உள்பட 5924 வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தலில் 4877 வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச் சீட்டுகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 210 வாக்குகள் கூடுதலாகப் பெற்ற அபி.வீரமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.