சீா்காழி வட்டாரம் புங்கனூரில் இயந்திரம் மூலம் சேற்று வயலில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
புங்கனூரை சோ்ந்த தமிழரசன் என்பவரது வயலில், சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் மேற்பாா்வையில் இந்த செயல்விளக்கம் நடைபெற்றது.
அப்போது அவா், இந்த இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு 3 ஏக்கா் வரை விதைக்கலாம். விதை சீராக விழுவதால் அளவான நிா்ணயிக்கப்பட்ட பயிா் எண்ணிக்கையை கொடுக்கிறது. ஓா் ஏக்கருக்கு 15 கிலோ விதை போதுமானது. இதன் மூலம் நாற்றங்கால் பராமரிப்பு உள்லிட்ட செலவுகள் குறைகிறது. பாசன நீா் தேவையும் குறைகிறது என்றாா்.
இதில், ஊராட்சித் தலைவா் ஜூனைதா பேகம் முன்னிலை வகித்தாா். முன்னோடி விவசாயிகள் 30 நபா்கள் கலந்து கொண்டனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.