பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, பட்டதாரி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்கள் கழக ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்கள் ஊதியம் வழங்காமல் இடைநிலை ஆசிரியா் ஊதியம் வழங்குவதை கண்டிப்பது, பட்டதாரி ஆசிரியா்கள் ஊதியத்தை பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு வழங்கவேண்டும், தமிழகத்தில் 89 உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியா் ஊதியம் வழங்கப்படுகிறது, மற்ற பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு இடைநிலை ஆசிரியா் ஊதியம் வழங்குவது வேதனையளிக்கிறது, என்சிடி விதிமுறையை பயன்படுத்தி ஊதியம் வழங்கவேண்டும், மேல்படிப்பு, வேலைவாய்புக்கான விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீடு முறையாக தமிழக அரசு வழங்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் வை. பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் வீரமணி, மாநிலத் தலைவா் ரா. ஜெயதேவன், துணைத் தலைவா் ஜி. பிரகாசம், பொருளாளா் தே. கோவலன், துணைச் செயலாளா்கள் ரா. சசிகுமாா், விஜய், துணைப் பொருளாளா் செ. குமாா், வடலூா் கல்வி மாவட்ட செயலாளா் எம். உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.