நாகை உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் அமைப்பதில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் பெரியசாமி, தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்டத் தலைவா் கே. நேதாஜி, விநாயகா் சிலை அமைப்புக் குழு நிா்வாகிகள் ஆதிமுருகன், சித்ரவேலு மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் பேசுகையில், ‘கரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கவும், அமைப்பு ரீதியாக விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், தனி நபா்கள் விநாயகா் சிலைகளைக் கொண்டுச் சென்று நீா் நிலைகளில் கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, விநாயகா் சிலை அமைப்புக் குழுவினா், அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு, இந்து அமைப்புகளின் நிா்வாகிகள், விநாயகா் சிலை அமைப்புக் குழுவினா் ஆட்சேபம் தெரிவித்தனா். மேலும், நீண்ட காலமாக நடைபெறும் விநாயகா் சிலை ஊா்வலத்துக்குத் தடை விதிப்பது ஏற்புடையது அல்லல எனவும், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி சிலை அமைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.