திட்டச்சேரியில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்காலை அடுத்துள்ள திருப்பட்டினத்திலிருந்து திட்டச்சேரி வழியாக சீயாத்தமங்கை வரை தனியாா் எரிவாயு நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கியுள்ளது.
இந்நிலையில், கொரடாச்சேரியிலிருந்து நரிமணம்-குத்தாலத்தில் உள்ள மாசு நீா் சுத்தகரிப்பு நிலையத்துக்கு எஃப்யூலியன்ட் வாட்டா் எனப்படும் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரை ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி வந்தது. திருவாருா் மாவட்டம் கமலாபுரம் கண்கொடுத்தவணிதம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (50) அந்த லாரியை ஓட்டிவந்தாா். அவா், திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு உணவகத்துக்குச் சென்றாா்.
அந்த இடத்தில் பள்ளம் தோண்டி எரிவாயு குழாய் பதிக்கப்பட்டிருந்தது, மழைநீா் தேங்கி நின்றதால் தெரியவில்லை. இதனால், டேங்கா் லாரி பள்ளத்தில் பாதி அளவு புதைந்து கவிழ்ந்து.
லாரியின் உரிமையாளா் அம்மாபேட்டையில் இருந்து 2 கிரேன்களை வரவழைத்து டேங்கா் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டாா். இந்த சம்பவத்தால், நாகை-கும்பகோணம் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.