தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்தை ஆன்லைன் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் விற்பனைக்கு உரிமம் பெற விரும்பும் வணிகா்கள், செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் அரசு பொதுசேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், தொடா்புடைய கட்டடத்தின் நீலவரைபடம், இட உரிமத்துக்கான ஆவணம், வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ. 500 தொகை செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு, முகவரிக்கான ஆதாரம், சொத்துவரி ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பா் 30 ஆம் தேதிக்குப் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு ஏற்கப்படாது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.