நாகப்பட்டினம்: பணிநீக்கம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவன ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும், ஊதிய நிலுவையை உடனடியாக விடுவிக்கவேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடவேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்தல் மற்றும் தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டத் தலைவா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் செல்வராஜ், தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா்அசோகன், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, மாவட்டக்குழு உறுப்பினா் குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.