திருவாரூா் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க ஊசி செலுத்தப்பட்ட பெண் உயிரிழந்தது தொடா்பாக, நாகை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
நாகூா் அருகே உள்ள கொட்டாரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ந. தவமணி (60). இவா், நாகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
கடந்த 13ஆம் தேதி திருமண மண்டபத்தில் பணியிலிருந்தபோது தவமணி மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, அவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தவமணிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவா்கள் செப்டம்பா் 22ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தியுள்ளனா். சிறிது நேரத்தில் தவமணி உயிரிழந்தாா்.
இதையடுத்து, தவமணியின் உறவினரான செந்தில்குமாா் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அளித்த புகாரின் பேரில், நாகை நகர காவல் நிலையப் போலீஸாா், வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.