இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக நாகை துறைமுகம் பகுதியில் மீன்பிடி படகில்  ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த  ரூ 1.50 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை  நாகை சுங்கத்துறையினர் இன்று (செப்-27) திங்கள
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாபண்டல்களைப் பார்வையிட்ட சுங்கத்துறை உதவி ஆணையர் சி.செந்தில்நாதன், ஆய்வாளர் எம்.டி. எம். மாசிலாமணி  உள்ளிட்டோர்.
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாபண்டல்களைப் பார்வையிட்ட சுங்கத்துறை உதவி ஆணையர் சி.செந்தில்நாதன், ஆய்வாளர் எம்.டி. எம். மாசிலாமணி  உள்ளிட்டோர்.

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக நாகை துறைமுகம் பகுதியில் மீன்பிடி படகில்  ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த  ரூ 1.50 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை  நாகை சுங்கத்துறையினர் இன்று (செப்-27) திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

நாகை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம்  கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாகை சுங்கத்துறை அதிகாரிகள் நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வாளர் எம்.டி.எம். மாசிலாமணி தலைமையிலான சுங்கத்துறையினர் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகம், கீச்சாங்குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  இரவு தொடர் கண்காணிப்பில்  ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, மீன்பிடிப்பில் பயன்படுத்தப்படும்  கண்ணாடி நாரிழை படகு ஒன்றில் 10 பண்டல்களில் கஞ்சா  இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கஞ்சா பண்டல்கள், படகு, மீன்பிடி வலைகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை சுங்கத் துறையினர் பறிமுதல்  செய்து, நாகை கடற்கரை சாலையில் உள்ள சுங்கத்துறை உதவி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.  பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சா பண்டல்களை  சுங்கத்துறை  உதவி ஆணையர் சி.செந்தில்நாதன் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியது : நாகையிலிருந்து இலங்கைக்கு கண்ணாடி நாரிழை படகு மூலம்  கடத்தப்பட  இருந்த 280 கிலோ எடையுள்ள கஞ்சா ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1.50 கோடி ஆகும். இதுதொடர்பாக துறை சார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com