சீர்காழி: சீர்காழி அருகே புளிச்சக்காடு நித்தியவனம் கிராமத்தில் புதிதாக சந்தான முத்துமாரியம்மன் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது. அதில் ஸ்ரீ வினாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சந்தான முத்துமாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பலிபீடம் ஆகிய சுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. திருப்பணிகள், வர்ணபூச்சு பணிகள் முழுமையடைந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 4 ஆம் தேதி) அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
விழா அன்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மேள, தாளங்களுடன் கோயிலை வலம் வந்து விமான கலசம், மூலஸ்தான விமானம் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளிலும், சுவாமிகளுக்கு மஞ்சள், திரவிய பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான நறுமண பொருள்களைக் கொண்டு மகாஅபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், ஊர்பிரமுகர்கள், கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.