வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்த கடலோரக் காவல் நிலைய காவலர்கள் அகதியாக தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்தவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதானவர்கள் தேசிய போதை தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் இன்று (ஏப்.8) காலை ஒப்படைக்கப்பட்டனர்.
வேதாரண்யம் கடல் வழியாக வியாழக்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் குழும காவல்துறையினர் நேற்று இரவு கண்காணித்தனர்.
அப்போது, ஆறுகாட்டுத்துறை உப்பனாற்றின் கரை பகுதியில் நின்ற வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் 9 மூட்டைகளில் 270 கிலோ கஞ்சா இருந்தது,
இதையடுத்து ஆறுகாட்டுத்துறை, சுனாமி குடியிருப்பு வாகன ஓட்டுநர் சுரேஷ் (40) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையின் பேரில் தலைமறைவாக இருந்த இருவர் இன்று காலையில் பிடிபட்டனர்.
இவர்களில் ஒருவர் தமிழகத்தில் அகதியாக வந்து தங்கியுள்ள காந்தரூபன் (52) இலங்கையைச் சேர்த்தவர் என்பதும், மற்றவர் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாரதிதாசன் (40) என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதான மூவரும் தேசிய போதை தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டனர்.