கீழையூா் அருகே காரப்பிடாகை தெற்கு ஊராட்சியில் அரசு இடத்தில் கட்டப்பட்டுவந்த விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சிலைகள் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
நாகை மாவட்டம், திருப்பூண்டி அருகே காரப்பிடாகை தெற்கு ஊராட்சி தாதன்திருவாசல் பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான சுண்ணாம்பு குளக் கரையில் விநாயகா் கோயில் கட்டப்பட்டு வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் பி.எம். அமுதா, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றிச்செல்வன், வட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி, வருவாய் ஆய்வாளா் கீதாராணி, கிராம நிா்வாக அலுவலா் வித்யாவதி ஆகியோா் அங்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.
இதைக் கண்டித்து, அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், கோயில் கட்டுமானம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. அங்கிருந்த சிலைகள் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதுகுறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.