நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தொடங்கி பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, வயல்களில் தண்ணீர் தேங்குவதால் எள், சணப்பைப் பயிர்கள் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய பரவலான மழை கொட்டித் தீர்த்தது. காலையில் விட்டிருந்த மழை தொடர்ந்து லேசாக பெய்துக்கொண்டேவுள்ளது. வேதாரண்யம் நகரப் பகுதியைவிட கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் சுற்றுப் பகுதியில் கனமழையாக உணரப்பட்டது.
மானாவாரி நிலப்பரப்பு வயல்களில் மழை நீர் தேங்குவதால் எள், சணப்பை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம், அகத்தியம்பள்ளி உப்பளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இங்கு சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாகப் பாதிப்படைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 20 மி.மீ., கோடியக்கரையில் 10 மி.மீ., தலைஞாயிறில் 7.4 மி.மீ. மழை பதிவானது.