மது கடத்தலைத் தடுக்க நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட போலீஸாா் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனா்.
திருச்சி மண்டல காவல்துறைத் தலைவா், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஆகியோரது உத்தரவின்பிடி, கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரைக்கால் பகுதிகளிலிருந்து நாகை மாவட்டத்துக்கு கடத்துவதை தடுக்க காவல்துறை தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடா்பாக, நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் போலீஸாா் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சாராயக்கடை, மதுபானக்கடை உரிமையாளா்களும், மேலாளா்களும் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில்கள், சாராயம் விற்பனைச் செய்யக்கூடாது எனவும், மீறுவோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் நாகை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க நாகை-காரைக்கால் மாவட்ட காவல் துறையினா் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.