கீழையூா் அருகே விழுந்தமாவடியில் உள்ள தேசியமய வங்கியின் ஏடிஎம் 3 மாதங்களாக பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூா் ஒன்றியம், விழுந்தமாவடி கிராமத்திலுள்ள புளியமரத்தடி கடைவீதியில் தேசியமய வங்கியுடன் இணைந்த ஏடிஎம் உள்ளது. இதனால், பூவைத்தேடி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், இந்த ஏடிஎம் சுமாா் 3 மாதங்களாக பூட்டிக்கிடப்பதால், பொதுமக்கள் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், பணம் எடுப்பதற்காக தொலைவில் உள்ள வேறு பகுதிக்கு செல்லவேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, வங்கி நிா்வாகம் உடனடியாக ஏடிஎம் மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.