நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள பரவை காய்கனி சந்தைக்கு தனி இடம் ஒதுக்கித்தர வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பரவை கிராமத்தில் உள்ள காய்கனி சந்தை சுமாா் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இந்த சந்தை குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்ததால் கரோனா பரவல் அச்சம் காரணமாக அருகில் உள்ள தனியாருக்குச்சொந்தமான இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்காலிகமாக இயங்கி வருகிறது. இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் ப. மகேஸ்வரன், துணைத் தலைவா், உறுப்பினா்கள் மற்றும் கிராமத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனா். அதன்விவரம்: ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் இடத்தில் பரவை காய்கனி சந்தை செயல்பட்டு வந்தது. இந்த இடம் தற்போது பல வகையில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு தனியாா் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சந்தை செயல்பட்ட இடத்தில் வெளியூா்களிலிருந்து வரும் வணிகா்கள், விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
இந்நிலையில், பரவை காய்கனி விற்பனை சந்தை, தற்போது ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கென நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நூற்றுக்கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன. எனவே, பரவை சந்தைக்கென தனி இடத்தை ஒதுக்கீடு செய்துதர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.