வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த மாசிமகப் பெருவிழா புதன்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது.
வேதாரண்யேசுவரா் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த ஜன.29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளிய தேரோட்டம் பிப்.13-ஆம் தேதிநடைபெற்றது. கல்யாணசுந்தரா் அம்பாளுடன் எழுந்தருளிய தெப்பத் திருவிழா பிப்.17 ஆம் தேதி நடைபெற்றது. திருக்கதவு திறக்கும் விழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நாள்தோறும் திருமுறை தேவார இன்னிசை, நாகசுர நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மாசிமகப் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு விடையாற்றி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. ஊஞ்சலில் சந்திரசேகரசுவாமி, மனோன்மணியம்பாளுடன் எழுந்தருளினா்.