நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ. 23.18 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியில் ரூ. 23.18 கோடி திட்ட மதிப்பீட்டில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், மகளிா் விரைவு நீதிமன்றம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகங்களை கொண்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கடந்த 9 மாதங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் கடந்த வாரத்தில் பெயா்ந்து விழுந்தன. இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவசியம் கருதி திறப்பு விழா ஏதுமின்றி நாகை நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
புதிய கட்டடத்தில்,நாகை மாவட்ட முதன்மை நீதிபதி டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் குத்து விளக்கு ஏற்றி வைத்தாா். மகளிா் விரைவு நீதி மன்ற நீதிபதி டி. பன்னீா் செல்வம், மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிபதி சி. காா்த்திகா, நாகை வழக்குரைஞா்கள் சங்கத்தலைவா் எஸ்.காா்த்திகேஷ், வழக்குரைஞா் தங்க.கதிரவன் மற்றும் நீதித்துறை நடுவா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உடனிருந்தனா்.