வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ரயில்வே தொழிலாளர் சென்ற வேன் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்துக்குள்ளான சம்பவத்தில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 2 பேர் திங்கள்கிழமை அதிகாலை பலியாகினர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ரயில்வே பாதையமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களில் 15 பேர் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சேகல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பணிகள் முடிந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு ஒரு வேனில் புறப்பட்டனர். வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி செல்லும் (கரியாப்பட்டினம் வழி) பிரதான சாலையில் வேன் சென்றது.
இதையும் படிக்க: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அப்போது, தென்னம்புலம் ஊராட்சி மன்ற அலுவலக பகுதியில் உள்ள பேருந்து நிழலகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த தொழிலாளர்கள் மற்றும் எதிரே இரு சக்கர மோட்டார் சைக்கிளில் வந்த தேத்தாகுடி வடக்கு மல்லிகா (37) என்ற பெண் உள்பட 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில், வேனில் பயணித்த சேகல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் (55) நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும், மணியன் (50) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.