கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா் சடலம் 3 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது.
நாகை நம்பியாா் நகா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு மகன் அய்யாசாமி (40). மீனவா். இவா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி நம்பியாா் நகரைச் சோ்ந்த சசிக்குமாா் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரகு, சிவசங்கரன் உள்ளிட்ட 5 பேருடன் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றாா்.
நாகை துறைமுகத்துக்கு கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, காற்றின் வேகத்தால் அய்யாசாமி கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கி, மாயமானாா்.
நம்பியாா் நகா் மீனவா்கள்10-க்கும் மேற்பட்டோா் படகுகளில் சென்று மாயமான மீனவரை கடந்த 3 நாள்களாக தேடிவந்தனா்.
இந்நிலையில், அய்யாசாமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டு, நம்பியாா் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னா் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழுமப் போலீஸாா் விசாரிக்கின்றனா்.