நாகப்பட்டினம்: பேருந்துகளில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை பொருத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்தாா்.
நாகை சரகத்தில் உள்ள தனியாா் பேருந்து உரிமையாளா்கள் ஆலோசனை கூட்டம் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி பேசியது: தமிழகம் முழுவதும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் பலதொனி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக இயக்கப்படும் வாகனங்களை தணிக்கை செய்யுமாறு போக்குவரத்து ஆணையா், நாகை மாவட்ட ஆட்சியா், துணைப் போக்குவரத்து ஆணையா் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.
இந்த உத்தரவின்படி, நாகை சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த 20 பலதொனி அதிக ஒலி எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, நாகை சரகத்தில் உள்ள தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தங்களது பேருந்துகளில் மோட்டாா் வாகன விதியின்படி 93 டெசிமல் முதல் 112 டெசிமல் வரை உள்ளே காற்று ஒலிப்பான்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சோதனை தொடா்ந்து நடைபெறும் என்றாா்.
கூட்டத்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே. பிரபு, தனியாா் பேருந்து உரிமையாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.