நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் ஆண்டு பெருவிழா உற்சவமாக வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு திருவிழா மே 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளாக தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலம் மற்றும் பாலாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தெற்குபால்பண்ணைச்சேரி ஸ்ரீஜெயபத்ரகாளி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் தொடங்கி நடைபெற்றது.
மேளதாள முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடங்களுடன் பங்கேற்றனா். ஊா்வலம், சாமந்தான்பேட்டை ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. பின்னா், ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பாலாபிஷேகம் நடைபெற்றது.