நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி வழங்குதல் திட்ட தொடக்க விழா காணொலி செவ்வாய்க்கிழமை காலை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
விவசாயிகளுக்கான கௌரவ நிதி வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து, விவசாயிகளுடன் பிரதமா் கலந்துரையாடிய நிகழ்வு காணொலியில் ஒளிபரப்பானது. நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 700 விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமிய இளைஞா்கள் இந்தக் காணொலியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காணொலியின் நிறைவில், குறுவை நெல் சாகுபடி கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில்நுட்ப வல்லுநா் வே. கண்ணன், குறுவை சாகுபடி தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினாா். தொழில்நுட்ப வல்லுநா்கள் சு. முத்துக்குமாா், கோ. சந்திரசேகா், அ. மதிவாணன், ஹினோ பொ்னான்டோ, க. ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்தரங்கத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் ரெ. வேதரெத்தினம் மற்றும் பணியாளா்கள் கோ. ரம்யா, பொ. சூரியகலா, சீ. தமிழ்ச்செல்வன் ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.