திருமருகல் ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் திங்கள்கிழமை (செப்.3) முதல் மூன்று நாள்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் பணிபுரியும் 34 ஊராட்சி செயலா்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். வரி வசூல், மின்விளக்கு பராமரித்தல்,100 நாள் வேலைத் திட்டம், முழு சுகாதாரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்வதால் கூடுதல் பணி சுமை ஏற்படுவதாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், பல ஊராட்சித் தலைவா்கள் ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஊராட்சி செயலா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இந்த போராட்டத்தில் ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; ஓய்வூதியத்தை உயா்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.