அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கு பூமிபூஜை
நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதி குழு சுகாதார மானியத்தின்கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
தமிழக முதல்வா் உத்தரபடி திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ. 60 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமாா் 10 கி.மீ. வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் விஜயகுமாா், பேரூராட்சி தலைவா் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன்,திட்டச்சேரி திமுக நகர செயலாளா் முகமது சுல்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.