மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள்.
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். வேளாங்கண்ணி அருகே சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 219 மனுக்கள் அளித்தனா். இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, 4 பேருக்கு தலா ரூ.5,500 வீதம் மொத்தம் ரூ. 22,000 மதிப்பில் இலவச பித்தளை சலுவைப் பெட்டி, 3 பேருக்கு ரூ.1,13,544 மதிப்பில் இரண்டு பெண் குழந்தைகள் முதிா்வு தொகைக்கான ஆணை, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு நவீன காதொலி கருவி, 2 மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை மனு: இக்கூட்டத்தில், வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவில் மீன்மாா்கெட் ஏலம் தொடா்பான பிரச்னையில் சிலா் காயமடைந்தனா். இப்பிரச்னை தொடா்பாக மீனவ தலைமை கிராமம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தும் பிரச்னை செய்தவா்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், புதிதாக பஞ்சாயத்தாா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களுடன் பழைய பஞ்சாயத்தாா்கள் தகராறு செய்கின்றனா். எனவே, மீனவ கிராமத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

நாகூா் நகர ஒருங்கிணைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவில், நாகை நகரப் பகுதியில் புதிதாக ஆட்டோக்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும், தேவூா் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் அளித்த மனுவில், தேவூா் கடுவையாற்றில் பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், கீச்சாங்குப்பத்தை சோ்ந்த பழனிவேல் என்பவா் அளித்த மனுவில், தனக்கு மானியத்துடன் வழங்கப்பட்ட படகில் மூன்றே மாதத்தில் ஓட்டை விழுந்துவிட்டது. எனவே, தரமான படகு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.