"வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க வேண்டும்'

திருவாரூர் மாவட்டத்தில் வயிற்றுப் போக்கால் குழந்தைகள் உயிரிழப்பதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் வயிற்றுப் போக்கால் குழந்தைகள் உயிரிழப்பதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.
வயிற்றுப் போக்குக் கட்டுப்பாடு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு இருவார முகாம் ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கும் ஒன்றாகும்.
பொதுமக்களிடையே சர்க்கரை உப்புக் கரைசல் (ஒஆர்எஸ்) மற்றும் ஜிங்க் மாத்திரைகளின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் வயிற்றுப்போக்கு நோயினால் குழந்தைகள் இறப்பதை தவிர்க்கலாம். முகாம் மூலம் சுமார் 5 வயதுக்குள்பட்ட 96,500 குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.
அனைத்து வீடுகளுக்கும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் சென்று ஒஆர்எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் உபயோகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவை உபயோகப்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கவேண்டும். குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு தலா ஒரு ஒஆர்எஸ் பொட்டலம் கொடுக்கவேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனை களில் ஒஆர்எஸ் திரவ முனையங்களை ஏற்படுத்துதல் வேண்டும். கை கழுவும் முறைகள் குறித்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, செயல்முறை விளக்கம் அளிக்கவேண்டும்.
முகாமுக்குத் தேவையான ஒஆர்எஸ் பொட்டலங்கள், ஜிங்க் மாத்திரைகள், துண்டு பிரசுரம் போன்ற விளம்பர பொருள்கள் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். குழந்தை இறப்பு மற்றும் வயிற்றுப்போக்கை நிறுத்தவும், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கவும் முகாம்களில் பொதுமக்கள் பங்கு கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், பொது மருந்து மற்றும் நோய்த்தடுப்பு துறையின் இணை இயக்குநர் அசோகன், துணை இயக்குநர் செந்தில்குமார், முதன்மைக்கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com