நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் குருநாதன். இவரது மகன் வித்யாசாகர் (21) கும்பகோணத்தில் கல்லூரி ஒன்றில் எம்பிஏ இறுதியாண்டு படித்து வந்தார். இவர்கள் குடும்பத்திற்கும், ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வித்யாசாகர் தனது சித்தப்பா வடுகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் 12-ஆம் தேதி இரவு நீடாமங்கலத்திலிருந்து ஒரத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜீப்பில் வந்த ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தனராம். இதையடுத்து வடுகநாதனும் ,வித்யாசாகரும் ஜீப்பில் வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபோது, ஜீப்பில் வந்த ஒரத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன், ஓ.என்.எஸ்.ராஜன், மகேந்திரன், சந்தோஷ், பிரபு, மாரியப்பன், முருகன், செந்தில்குமார் ஆகியோர் வித்யாசாகரை தாக்கினராம். இதில் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த ஓ.என்.எஸ். ராஜன் (60), அவரது மகன் முருகன் (27), செந்தில்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த பிரபாகரன்,பிரபு, மாரியப்பன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.