நீடாமங்கலம் ரயில் நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸார் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீடாமங்கலம் ரயில் நிலையம் உள்ள இடத்திலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பகுதி தண்டவாள இணைப்பில் ஏப்.12-ஆம் தேதி மர்ம நபர்கள் யாரோ ஜல்லி கற்களை வைத்திருந்தனர். இதனால், சில ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உளவுத்துறையினர், போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்பவர்கள், தண்டவாள பகுதி அருகில் விளையாடும் சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஏப்.12-ஆம் தேதி தண்டவாள இணைப்பில் ஜல்லி கற்கள் வைத்தவர்கள் யாரென்று விவரம் தெரியவில்லை. போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.