நீடமங்கலத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு 1,965 டன் பொதுரக நெல் அரைவைக்காக வியாழக்கிழமை சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,965 டன் பொதுரக நெல் மூட்டைகள், 156 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. இதைத்தொடர்ந்து, அரைவைக்காக காஞ்சிபுரத்துக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதலே லேசானது முதல் விட்டு, விட்டு மழை பெய்த போதிலும், சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.