திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் கிராமத்தில், நிலத்தில் சாகுபடி செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு வெள்ளிக்கிழமை விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அரியமங்கலத்தைச் சேர்ந்த அலமேலு ஆச்சி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் சாகுபடி நிலைத்தை, செறுபனையூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (38) கிரயத்துக்கு வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கடந்த 10 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து, சாகுபடி செய்து வந்தாராம்.
இந்நிலையில், சுரேஷ் அண்மையில் அந்த நிலத்தில், விதை தெளித்து சாகுபடியைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபணை தெரிவித்த ரமேஷ், அதே இடத்தில் மருந்து தெளித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சுரேஷை ரமேஷ் அரிவாளால் வெட்டினாராம். இதில், அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ரமேஷை தேடிவருகின்றனர்.