திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச்சென்றனர்.
செருமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஏ. சுப்பையன் (59). இவர் வீட்டிலிருந்து தலா 5 பவுன் எடைகொண்ட 2 சங்கிலியை எடுத்துக்கொண்டு, மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள வங்கிக்கு வெள்ளிக்கிழமை வந்தார். இதில், ஒரு சங்கிலியை வங்கியில் அடகுவைத்து, ரூ.1 லட்சம் வாங்கிய அவர், பணத்தையும், மற்றொரு சங்கிலியையும் இருசக்கர வாகனத்தில் துணிப்பையில் சுற்றிவைத்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில், செருமங்கலத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சங்கிலியும், ரூ.1 லட்சமும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இதில் தொடர்புடைய நபர்களைத் தேடிவருகின்றனர்.