திருவாரூரில் காணாமல் போன சிறுவன் தஞ்சையில் மீட்பு

திருவாரூரில் காணாமல் போன சிறுவன் தஞ்சையில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

திருவாரூரில் காணாமல் போன சிறுவன் தஞ்சையில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
திருவாரூர் புதுத்தெருவில் வசிப்பவர் சசிகுமார். இவர் திருமருகல் அருகே உள்ள புத்தகரம் ஊராட்சி அலுவலகத்தில் செயலராகப் பணியாற்றுகிறார். இவரது மகன் ஹரிவசந்த் (13) திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற சிறுவன் ஹரிவசந்த், மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் சசிக்குமார் புகார் செய்தனார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். தனிப்படை போலீஸார், திருவாரூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது,  ஒரு பெண்ணுடன் ஹரிவசந்த் செல்வது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் ஹரிவசந்த் திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு செல்ல வழி தெரியாததால், தன்னை அழைத்துச் செல்லும்படி அந்த பெண்ணிடம் கூறியதும், இதையடுத்து அந்த பெண், ஹரிவசந்தை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. இதனால், பேருந்தில் வெளி இடத்துக்கு சிறுவன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்
வேளாங்கண்ணியில் சுற்றித்திரிந்த சிறுவன்...
 அதன்படி, தனிப்படை போலீஸார் நாகை, வேளாங்கண்ணி பேருந்து நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது,  சிறுவன் ஹரிவசந்த் வேளாங்கண்ணி பேராலயம் பகுதியில் சுற்றித் திரிந்ததும், பின்னர் மதுரை பேருந்தில் ஏறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி பேருந்து நிலைய அதிகாரியின் மூலம், சிறுவன் ஏறிய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தஞ்சாவூரில் சிறுவன் இறங்கியது தெரியவந்தது. 
தஞ்சாவூரில் மீட்பு...
இதையடுத்து, தனிப்படை போலீஸார் தஞ்சாவூர் சென்று, தேடுதல் பணியை தொடர்ந்தபோது,  தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் பத்மநாபன், சிறுவன் ஹரிவசந்தை அடையாளம் கண்டு, தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, ஹரிவசந்த் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எஸ்பி பாராட்டு....
சிறுவனை மீட்ட, தனிப்படை காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், உதவி ஆய்வாளர் பாரதநேரு, சிறப்பு உதவி ஆய்வாளர் வீரபாண்டியன், தலைமை காவலர் சரவணகுமார் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் பாராட்டுத் தெரிவித்ததோடு, தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் பத்மநாபனுக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com