கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலம் அருகேயுள்ள புனவாசலில் அருள்பாலிக்கும் மழுபெருத்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை மற்றும் கோ பூஜை நிறைவுபெற்றதும் காலை 9.25 மணிக்கு, யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. கோயில் குருக்கள் உச்சுவாடி எம்.தியாகராஜா, பூசலாங்குடி ஆர்.சபரிகிரீஷ் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
பின்னர், 10.05 மணிக்கு விமானத்துக்கும், 10.25 மணிக்கு மூலஸ்தானத்துக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், சந்தனக் காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வடபாதிமங்கலம், புனவாசல் கிராம மக்கள் செய்திருந்தனர்.