மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 இடங்களில் திங்கள்கிழமை (செப்.17) பிரசாரப் பயணம் தொடங்கப்படவுள்ளதாக, அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: பெட்ரோலியப் பொருள்களின் வரலாறு காணாத விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வேலூர், சென்னை, வேதாரண்யம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 6 இடங்களிலிருந்து பிரசாரப் பயணம் செப். 17-ஆம் தேதி தொடங்கி, மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, செப். 23-ஆம் தேதி திருப்பூரில் நிறைவடையும். பின்னர், அங்கு பிரசார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
வேலூரில் தொடங்கும் பிரசாரப் பயணத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், தூத்துக்குடியில் முன்னாள் எம்எல்ஏ நா.பெரியசாமி, கன்னியாகுமரியில் மாநிலத் துணை செயலாளர் மு.வீரபாண்டியன், புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், வேதாரண்யத்தில் கோ.பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகிப்பர்.
தொடர்ந்து, திருப்பூரில் நடைபெறும் பிரசார விளக்கப் பொதுக் கூட்டத்தில் ஏஐடியுசியின்அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள்ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.