ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்கம்: 600 பேருக்கு முதல் தவணைக்கான ஆணை

திருவாரூர் மாவட்டத்தில், மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 600 விவசாயிகளுக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 6:32 am IST

திருவாரூர் மாவட்டத்தில், மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 600 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான நிதியுதவி ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும் நோக்கில் மத்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 1.12.2018 வரை 5 ஏக்கருக்குள் விளை நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், மூன்று தவணைகளில் (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பட்டியல் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், ஊராட்சி எழுத்தர் ஆகியோரால் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 
 இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியானது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
பின்னர், கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு முதல் தவணைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வழங்கினார். 
இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் 10 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தலா 50 பயனாளிகள் என 500 பேருக்கு இந்த ஆணை வழங்கப்பட்டது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 31,276 விவசாயிகள் கண்டறியப்பட்டு கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. 
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சந்துரு, துணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக் கலைத் துறை  துணை இயக்குநர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஷ்வரி  மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
3 நாள் சிறப்பு முகாம்...
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுள்ளவர்கள், தங்கள் பெயர் பயனாளிகளின் பட்டியலில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், அவ்வாறு பயனாளிகள் பட்டியலில் இடம் பெறவில்லையெனில் உடனடியாக தங்கள் பெயரை சேர்க்க ஏதுவாக, திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 25, 26, 27 ஆகிய மூன்று நாள்கள் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்ட அலுவலகம், வருவாய்க்கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாமில், குறு, சிறு விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வங்கியின் ஐஎப்எஸ்சி எண் மற்றும் விளை நிலத்திற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அளித்து இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில்...  
மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கர்ணாவூர், சவளக்காரன், ராமாபுரம், பருத்திக்கோட்டை, திருப்பாலகுடி, மகாதேவபட்டினம், அரவத்தூர், சுந்தரக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரத்துக்கான நிதியுதவி ஆணைகள் வழங்கப்பட்டன.
 இந்நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் பால்துரை தலைமை வகித்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  இதில் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் ஜி.சரஸ்வதி, வட்டாட்சியர் லெட்சுமி பிரபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.