திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 7-ஆம் தேதி பக்தாள் உத்ஸவமும், 9-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு வீதியுலாவும், 10- ஆம் தேதி வசந்தன் உத்ஸவமும் நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 11-இல் இந்திர விமானத்திலும், 12-இல் யானை வாகனத்திலும், 13-இல் பூத வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர், ஏப்ரல் 14- ஆம் தேதி தென்பாதி டி. எஸ். நாராயணசாமி நாயுடு குடும்பத்தினர் உபயதாரர்களாக இருந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவில், ஏப்ரல்16-ஆம் தேதி தேரோட்டமும், 18-ஆம் தேதி பிராயச்சித்தாபிஷேகமும், 23-ஆம் தேதி தெப்ப உத்ஸவமும், 25-ஆம் தேதி சர்வ பிராயச்சித்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் எம். முருகையன், கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.