விவசாயத்துக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவந்த பாஜக ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என ஊடகவியலாளர் கே. அய்யநாதன் கேட்டுக்கொண்டார்.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தை ஆதரித்து, மன்னார்குடிதேரடி திடலில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது:
காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அரசியல் கட்சிகளின் போராட்டங்களை மீறி, அமல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயம் அழிந்து, அந்த பகுதியில் மனிதர்களும், கால்நடைகளும் வாழத் தகுதியற்றதாக நிலம் மாறிவிடும்.
எனவே, விவசாயத்துக்கு எதிரான பாஜக ஆட்சியை வீழ்த்த, வாக்காளர்கள் தங்களிடம் உள்ள வாக்கு எனும் சக்திவாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பேசியது:
ஒன்பது முறை மக்களவைத் தேர்தலில் நான் நின்றாலும், அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகதான் நிறுத்தப்பட்டுள்ளேன். உலக அறிவு, நாட்டின் அரசியல் நிலவரம், பொருளாதார அறிவு ஆகியவை இருந்ததால்தான் மத்திய அமைச்சராக 10 ஆண்டுகள் இருக்க முடிந்தது. நான் எம்பியாக இருந்தபோது தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரசாரத்தில் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், நகர செயலர் வீரா.கணேசன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ஆர். கனகவேல், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், தி.க.மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.