மன்னார்குடி அருகே சைக்கிளில் சென்றவர் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்தவர் க. அய்யாவு (58). இவர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆலங்கோட்டை கேணிப்பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக கீழநெம்மேலி மேலத் தெருவைச் சேர்ந்த ரா. மணி (26) ஓட்டிவந்த இருசக்கர வாகனம், சைக்கிள் மீது மோதியது.
இதில், அய்யாவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மணியை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.