எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மதுரை (தனியார்) நிறுவனத்தின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள் சார்பில் வாக்குப் பதிவு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தகுதியான அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட, நாகை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாகையிலிருந்து திங்கள்கிழமை இந்த பிரசாரம் தொடங்கியது.
இந்த பிரசார வாகனம், திருவாரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில், கல்லூரி தாளாளர் சு. வெங்கடராஜலு தலைமையில் கல்லூரி முதல்வர் பா.சி. மீனாட்சி, துணை முதல்வர் ஆர். அறிவழகன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கையெழுத்திட்டனர். இதேபோல், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேரோடும் வீதிகளில் வாகனம்
வலம் வந்தது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் உள்ள பதாகையில் ஏராளமானோர் கையெழுத்திட்டனர். மேலும் வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திருவாரூர் நகர்ப் பகுதி, விளமல் உள்ளிட்ட இடங்களிலும் வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
கூத்தாநல்லூரில்....
கூத்தாநல்லூருக்கு பிரசார வாகனம் சென்றதும், இந்தியன் வங்கி முன்பு, வட்டாட்சியர் ஜி. மலர்கொடி தலைமை வகித்து, பதாகையில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மருத்துவமனை சாலை, லெட்சுமாங்குடி பாலம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, ஏ.ஆர்.சாலை, திருவாரூர்- கூத்தாநல்லூர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களுக்கு வாக்குப் பதிவு விழிப்புணர்வு பிரசார வாகனம் சென்றது.
காவல் ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன், வர்த்தகர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கனோர் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர்.